Published : 31 Jul 2021 01:21 PM
Last Updated : 31 Jul 2021 01:21 PM

கேரளாவை மிரட்டும் கரோனா: மத்திய குழு ஆய்வை தொடங்கியது

புதுடெல்லி

கேரளாவில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் மத்திய உயர் நிலைக் குழு நேற்று அங்கு சென்று ஆய்வை மேற்கொண்டது.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் மிக அதிகமாக தினந்தோறும் 20 ஆயிரம் என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கேரளாவில் அன்றாட கோவிட் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளை மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து வலுப்படுத்துவதற்காக உயர்நிலை பல்துறைக் குழுவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே சிங் தலைமையில் இந்த 6 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு நேற்று கேரளா சென்றடைந்தது. இந்த குழுவினர் இன்று தங்கள் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளனர்.

ஆலப்புழா மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில சுகாதார துறையினருடன் மத்திய குழுவினர் விவாதித்தனர்.
தற்போதைய கள நிலவரம் குறித்து கேட்டறிந்ததோடு, மாநிலத்தில் பதிவாகும் பாதிப்பின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் மத்திய குழு பரிந்துரை செய்யவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x