Published : 30 Jul 2021 12:28 PM
Last Updated : 30 Jul 2021 12:28 PM

‘‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை’’- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

தமிழகத்தில் தற்போது பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஜூன் மாதம் தொடங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாத அனுமதி இம்மாதம் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. கரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையவில்லை. மேலும் 3-வது அலை தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரி, ஸ்டெர்லைட் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க தேவையில்லை’’ எனக் கூறினார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x