Published : 30 Jul 2021 09:46 AM
Last Updated : 30 Jul 2021 09:46 AM

கரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண் ரானே தகவல்

புதுடெல்லி

கோவிட்-19 பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 91 சதவீத நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நாராயண் ரானே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளுக்கு ஏராளமான நிவாரணங்களை அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ஆதரவளிப்பதற்காக, குறிப்பாக கோவிட்- 19 பெருந்தொற்று சூழலில் பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இந்த நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி துணைக் கடனாக வழங்கப்படுகிறது. வர்த்தகங்களுக்கு இணை இலவச கடனாக ரூ. 3 லட்சம் கோடி அளிக்கப்படுகிறது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக ‘உதயம் முன்பதிவின்' மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் புதிய முன்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. ரூ. 200 கோடி வரை கொள்முதல் செய்வதற்கு சர்வதேச ஒப்பந்தம் தேவையில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களுக்கு, வேளாண்மை மற்றும் ஊரகத் தொழில்களில் வேலை வாய்ப்பு வழங்குவதை ஊக்குவிப்பதற்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் வாயிலாக அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 17.15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 214495 பிரிவுகளை அமைப்பதற்காக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 6209.62 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பிரிவுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தொழில்நுட்பம், நிதி மற்றும் சந்தை நிபுணர்களின் வாயிலாக ஆதரவு அளிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் பிரிவுகளைத் தரம் உயர்த்துவதற்காக 15 முதல் 20% வரையிலான மானியத்துடன் ரூ. 1.0 கோடி வரை இரண்டாம் நிலை கடன் வழங்கப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் இதர காதி மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்களை இணையதளம் வாயிலாக சந்தைப் படுத்துவதற்காக மின்னணு வர்த்தகத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், பிற துறைகளைப் போல குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையும் பாதிப்பை சந்தித்தது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட இந்த துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மீது பெருந்தொற்றின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆய்வுகளை மேற்கொண்டன.

இதன் முடிவுகளின்படி 91% நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவது தெரிய வந்தது. பணப்புழக்கம் (55% நிறுவனங்கள்), புதிய வர்த்தகம் (17% நிறுவனங்கள்), தொழிலாளர் (9% நிறுவனங்கள்), தளவாடங்கள் (12% நிறுவனங்கள்) மற்றும் கச்சாப்பொருளின் இருப்பு (8% நிறுவனங்கள்) ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்ட 5 முக்கிய சவால்களாகும். கடந்த ஆண்டு பிரதமர் துவக்கி வைத்த ‘சாம்பியன்ஸ்’ என்ற இணையதளத்தின் வாயிலாக 25.7.2021 வரை 35,983 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x