Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

வங்கி திவால் அல்லது தடைக்கு உள்ளானால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி

மத்திய அரசு நேற்று வங்கிகளின் வைப்புத்தொகை காப்பீடுமற்றும் கடன் உத்தரவாதக் கழக(டிஐசிஜிசி) சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திருத்தத்தின்படி வங்கி வைப்பு நிதி வாடிக்கையாளர்கள் வங்கி திவால் ஆனாலோ தடைக்கு உள்ளானாலோ 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெறுவார்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகள்படி வங்கிகளின் செயல்பாடுகளுக்குத் தடைவிதிக்கப்படும்போது வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்கள். இந்தப் பிரச்சினையை சரி செய்யும் விதமாகவும், மக்களின் வைப்பு நிதிக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாகவும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் உருவாக்கப்பட்டது. மேலும் பட்ஜெட்டில் வைப்பு நிதிக்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. காப்பீடு தொகையை வாடிக்கை யாளர்களுக்கு 90 நாட்களுக்குள் கிடைக்க வழி செய்துள்ளார்கள்.

98.3% வங்கிக் கணக்குகள் சட்டத்திற்குள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஒவ்வொரு வைப்பு நிதி கணக்குக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் காப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டதால் நாட்டின் 93.5 சதவீத வைப்பு நிதி கணக்குகள் மற்றும் 50.9 சதவீத வைப்பு நிதி மதிப்பு இதற்குள் அடங்கிவிடும். மேலும் இந்த டிஐசிஜிசி சட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு, தனியார், கூட்டுறவு மற்றும்வெளிநாட்டு வங்கி வைப்பு நிதிகளும் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x