Published : 28 Jul 2021 04:35 PM
Last Updated : 28 Jul 2021 04:35 PM

நான் ஒன்றும் ஜோதிடர் இல்லை: பெகாசஸ் விவகாரத்தில் மம்தா பானர்ஜி கருத்து

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தலைமை ஏற்று நடத்துவீர்களா என்ற கேள்விக்கு, 'நான் ஒன்று ஜோதிடர் இல்லை' என்று பதிலளித்துள்ளார், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேகுற்வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி .

முன்னதாக இன்று, பெகாசஸ் உளவு மென்பொருள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி விவாதித்தனர். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக்குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து தலைமை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு 'நான் ஒன்றும் ஜோதிடர் இல்லை' என மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜி இதில் பங்கேற்கவில்லை.

இருப்பினும், செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்தார். "பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இவ்விவகாரத்தில் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என அவர் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நீங்கள் தலைமை ஏற்பீர்களா? என்று கேள்வி எழுப்ப, "நான் ஒன்றும் ஜோதிடர் இல்லை. யாராவது உருவாவார்கள். நான் அவர்களை ஆதரிப்பேன். நான் ஒரு சாதாரண தொண்டர். எப்போதும் தொண்டராகவே இருக்க விரும்புகிறேன்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னரும் கூட பேச்சுவார்த்தைகள் தொடரும். பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட ஒரு பொதுவான தளம் வேண்டும். நான், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கவுள்ளேன். லாலு பிரசாத் யாதவுடனும் நான் பேசிவருகிறேன்" என்று கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி, தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரின் பெயர்கள் பெகாசஸ் பட்டியலில் உள்ளது.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய மம்தா பானர்ஜி, "எனது பெயர் பெகாசஸ் பட்டியலில் இல்லாவிட்டால் என்ன நான் தொடர்பு கொள்ளும் அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் தொலைபேசிகள் அந்தப் பட்டியலில் உள்ளன. ஒரு தொலைபேசி ஹேக் செய்யப்பட்டால் அனைத்து தொலைபேசிகளும் ஹேக் செய்யப்படுகிறது என்றே அர்த்தம். என்னால் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாருடனும் பேச முடியவில்லை" என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போது இருந்தே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முற்படுவது பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கை மணி என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x