Published : 28 Jul 2021 10:45 AM
Last Updated : 28 Jul 2021 10:45 AM

கேரளாவில் கரோனா பாதிப்பு கையை மீறிச் சென்றுவிட்டதா? அரசும், மருத்துவ வல்லுநர்களும் சொல்வது என்ன?

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து தொற்று எண்ணிக்கை 2 இலக்கத்தில் உள்ள நிலையில், கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதைப் பார்க்கும்போது கேரளாவில் கரோனா தொற்றுப் பரவல், அரசின் கையை மீறிச் சென்றுவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

கரோனா முதல் அலை ஏற்பட்டபோது, சிறப்பாகக் கையாண்டு கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்த மாநிலம் எனப் பெயர் எடுத்த கேரளாவில் தொற்று குறையாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த சுகாதார அமைச்சர் என கே.கே.ஷைலஜாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டுகளைத் தெரிவித்த நிலையில் இன்று தொற்று வேகம் குறையவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிந்த வாரத்தில் மட்டும் கேரளாவில் 1,10,593 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது கரோனா பாஸிட்டிவ் ரேட் 11 சதவீதமாக இருக்கிறது.

கரோனா பாதிப்பு குறையாமல் இருக்கும் நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 2.50 லட்சம் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. ஆனால், இந்தத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் 35 பேருக்குத் தொற்று ஏற்பட்டதையடுத்து, தேர்வை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைவிட கரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் வேகமாக இருக்கும் கேரள மாநிலம், தடுப்பூசியை வீணாக்காமல் பயன்படுத்துவதிலும் முதலிடத்தில் இருக்கிறது. இருப்பினும், மக்களுக்கு செரோ பாஸிட்டிவ் வீதம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது.

கேரளாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 21 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டுள்ளனர். இது தேசிய சராசரியில் 9.9. சதவீதமாகும், எந்த மாநிலத்தையும்விட இது அதிகமாக இருந்தாலும், கரோனா தொற்று வேகம் குறையவி்ல்லை.

ஐசிஎம்ஆர் அமைப்பின் 4-வது செரோ சர்வே ஆய்வில், கேரளாவில் 42.7 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனா நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது என்றும், தேசிய அளவில் 67.6 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆன்ட்டிபாடி இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது, கேரளாவில் இன்னும் 48 சதவீதம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது, இந்திய அளவில் 33 சதவீதம் பேருக்கு வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது.

மருத்துவப் பொருளாதார வல்லுநர் ரிஜோ எம் ஜான் கூறுகையில், “இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கேரள மக்களில் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

அதிகமான மக்கள் நெருக்கம் மிகுந்த மாநிலமாக இருந்தபோதிலும் முறையான முகக்கவசம், சமூக விலகலைக் கடைப்பிடித்தலால் மக்கள் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சந்தோஷ் குமார் கூறுகையில், “கரோனா வைரஸ் பாதிப்பில் கேரளா எந்த இடத்தில் இருக்கிறது என்று ஆய்வு செய்வது அவசியம். ஒட்டுமொத்த பாஸிட்டிவ் விகிதம் கடந்த 6 வாரங்களாக 10 முதல் 12 சதவீதத்துக்குள் இருக்கிறது.

நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் 250 முதல் 300 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கேரளா முழுவதும் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஐசியு அனுமதியும், வென்டிலேட்டர் அனுமதியும் 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தடுப்பூசியை மக்கள் அதிகமாக செலுத்திக்கொண்ட விளைவுதான். உடல்நலக் குறைவு அதிகமாக ஏற்பட்ட மக்கள்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நான் எதிர்பார்க்காத வகையில் அதிகரிக்கிறது. இதேபோன்றுதான் முதல் அலையில் இருந்தது. ஏப்ரல் நடுப்பகுதியில்தான் 2-வது அலை தொடங்கியது. மே 12-ம் தேதி வாரத்தில் 2-வது அலை உச்சத்தில் இருந்து நாள்தோறும் 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதை நாங்கள் எதிர்பார்த்தோம். பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறோம். கரோனா உச்சமடைவதையும் தொடர்ந்து தள்ளிப்போட்டு, கரோனா வளைக்கோட்டை குறைக்கவும் முயன்று வருகிறோம்.

அதிகமான மக்கள் நெருக்கம், அதிகமான முதியோர், நீரிழிவு நோயாளிகள் அதிகமாக இருப்பது போன்றவை கேரள அரசின் முன் இருக்கும் சவாலாகும். ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பாலானோருக்குத் தொற்று தீவிரமாகவில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x