

கேரளாவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாக இதழில் ஹிட்லர், ஒசாமா பின்லேடன் ஆகியோர் முகங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் வெளியிட்டு ‘எதிர்மறை முகங்கள்’ என்று தலைப்பிட்டதற்காக அரசு பாலிடெக்னிக் முதல்வர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதழுடன் தொடர்புடைய 4 மாணவர்கள், பாலிடெக்னிக் முதல்வர் கிருஷ்ணன் குட்டி, இதழின் எடிட்டர் கோபி மற்றும் இந்த இதழை அச்சடித்த அச்சக உரிமையாளர் ஆகியோரை காவல்துறை இன்று கைது செய்தது. திருச்சூரில் உள்ள குழூரில் உள்ளது இந்த பாலிடெக்னிக்.
இந்த கல்லூரி இதழ் ஜூன் 4ஆம் தேதி வெளிவந்தது. இதில் ஒரு பக்கத்தின் தலைப்பு “எதிர்மறை முகங்கள்” (Negative Faces) என்பதாகும். இதில் ஹிட்லர், ஒசாமா பின்லேடன் ஆகியோருடன் நரேந்திர மோடியின் படத்தையும் பிரசுரித்துள்ளனர்.
இந்தப் படவரிசையில் சந்தனக் கடத்தல் வீரப்பன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ஜார்ஜ் புஷ் ஆகியோரும் உள்ளனர் என்று காவல்துறை கூறியுள்ளது.
சமூக சேவகர் சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்ச்சைக் கிளம்பியவுடன் பாலிடெக்னிக் நிர்வாகிகள் இதழை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர்.
இந்தச் சர்ச்சை காரணமாக பாஜக தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு இதழின் நகல்களை எரித்தனர்.