Last Updated : 26 Jul, 2021 08:35 PM

 

Published : 26 Jul 2021 08:35 PM
Last Updated : 26 Jul 2021 08:35 PM

கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: காவிரி ஆணையம் முன்பு தர்ணா நடத்தி பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

புதுடெல்லி

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினார்.

பிறகு அதன் தலைவர் ஹல்தாரிடம் கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் தனது நிர்வாகிகளுடன் இன்று டெல்லி வந்திருந்தார். அங்கு ஆர்.கே.புரத்தில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையம் முன் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பிறகு ஆணையத்தின் தலைவர் ஹல்தார், கண்காணிப்புக் குழு தலைவர் நவீன்குமார் அகியோரை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது..

தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணியை சட்டவிரோதமாக செயல்படுத்த கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

இதன் அடிப்படையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டில் உள்ளபோது, குறுக்கு வழியில் மத்திய அரசிடம் வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்ய சட்டவிரோதமான அனுமதியைப் பெற்றது. தற்போது ரூபாய் 9,000 கோடி மதிப்பீட்டில் புதிய வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதி கேட்டு மத்திய ஜல் சக்தி துறையிடம் அளித்தது.

இதை ஜல் சக்தி துறை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இச்செயல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும்,

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தை சிறுமைப்படுத்தும் நடவடிக்கையாகவும் உள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் வரைவு திட்ட அறிக்கையை உடனடியாக நிராகரிக்க வேண்டும்.

கருகும் குருவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை தொடங்கவும் தற்போது கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள நிலையில் தமிழகத்திற்கு ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையும் பெற்றுத்தர கண்காணிப்பு குழு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கண்காணிப்பு குழு அலுவலகம் உடனடியாக பெங்களூர் நகரத்தில் ஏற்படுத்திட வேண்டும். மேட்டூர் அணை-சரபங்கா திட்டம் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதனை தடுத்து நிறுத்திட வேண்டும். காவிரியில் சேலம், நாமக்கல்,கரூர் வரையிலும் ஆற்று கரையோரம் கசிவுநீர் கிணறுகள் அமைத்து பாசனம் என்கிற பெயரில் பெரும் வணிக நோக்கோடு தவறான வகையில் அனுமதி பெற்று உள்ளனர்.

கடந்த 2019-20 ம் ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 42 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா பாதிக்கும்.

எனவே ஆணையம் அனுமதி இல்லாமல் காவிரியில் சட்டவிரோத நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தமிழக அரசு கடந்தாண்டு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு பதிலளித்த ஹல்தார், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கொடுத்திருக்கிற வரைவுத் திட்ட அறிக்கையை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்பதை ஏற்றுக்கொண்டார்.

அதை நிராகரிப்பதை தான் மட்டும் முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்தார். மாநிலங்கள் உடைய கருத்தை கேட்க ஆணையை கூட்டத்தை விரைந்து கூட்டுவதாகவும் தலைவர் ஹல்தார் என்னிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆணையத்தின் அலுவலகத்தை உடனடியாக பெங்களூர் நகரத்தில் திறக்கப்படுவதாகவும், அனைவருடைய நீர் நிர்வாக அதிகாரத்தை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், தமிழகத்திற்கு மாதாந்திர அடிப்படையில் கிடைக்க வேண்டிய தண்ணீரை கண்காணிப்புக் குழு மூலம் பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்தார். இதற்காக, விரைவில் தமிழக கர்நாடக பகுதிகளை பார்வையிட உள்ளதாகவும் தலைவர் ஹல்தார் என்னிடம் தெரிவித்தார்.

மேட்டூர் அணையை சரபங்கா திட்டத்திற்கான உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது அதற்கு உரிய பதிலை அனுப்பி வைத்துள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவுபடி ஆணையம் செயல்படும் என அவர் உறுதியளித்தார்.

ஆணையத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு திட்டம் செயல்பாட்டுக்கு இருந்தாலும் அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இனி ஆணையத்தில் உடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் விரிவு அதற்கு செயல்படுத்துவதற்கும் அனுமதிக்க முடியாது என்றும் தலைவர் ஹல்தார் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்

இந்த சந்திப்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர் எம்.மணி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தலைவர் செந்தில்குமார், உயர்மட்ட குழு உறுப்பினர் சுதா தர்மலிங்கம், சேலம் மாவட்டச் செயலாளர் பெருமாள், தஞ்சாவூர் மாநகர செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட குழுவினர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x