Last Updated : 26 Jul, 2021 05:10 PM

 

Published : 26 Jul 2021 05:10 PM
Last Updated : 26 Jul 2021 05:10 PM

59% குழந்தைகளுக்கு மெசேஜ் அனுப்ப மட்டும் பயன்படும் ஸ்மார்ட்போன்; 10% மட்டுமே கல்வி கற்கிறார்கள்: என்சிபிசிஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலால் குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் நடந்து வரும் நிலையில், 59.2% குழந்தைகள் ஸ்மார்ட் போன்களை (வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் மூலம்) மெசேஜ் அனுப்பவே பயன்படுத்துகிறார்கள். 10.1 சதவீதம் மட்டுமே கல்வி கற்க பயன்படுத்துகிறார்கள் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 37.8% பேருக்கு ஃபேஸ்புக்கில் கணக்கும், 24.3 சதவீதம் பேருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கும் உள்ளது எனத் தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் கணக்குத் தொடங்க வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணாக இந்தக் குழந்தைகள் கணக்கு வைத்துள்ளன.

“இன்டர்நெட் இணைப்புடன் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பிற உபகரணங்களைக் குழந்தைகள் பயன்படுத்துவதால் உடல்ரீதியாக, மனரீதியாக, சமூகரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகள்” என்ற தலைப்பில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் 5,811 பேர் பங்கேற்றனர். இதில் பள்ளி செல்லும் குழந்தைகள் 3,491 பேர், பெற்றோர் 1,534 பேர், 6 மாநிலங்களில் உள்ள 60 பள்ளிகளைச் சேர்ந்த 786 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு வடகிழக்கு மண்டலங்கள் என 15 இடங்களில் இருந்து பங்கேற்றனர். ஒவ்வொரு மண்டலத்திலும் ஆயிரம் பேர் ஆய்வில் பங்கேற்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்த ஆய்வில் பங்கேற்ற 10 வயதுள்ள குழந்தைகளில் 37.8 சதவீதம் பேருக்கு ஃபேஸ்புக்கில் கணக்கும், 24.3 சதவீதம் பேருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கும் இருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வகுத்த விதிமுறைகளுக்கு முரணாக குழந்தைகள் கூட கணக்கு வைத்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளைத் தாங்கி பதிவுகள் வரும், குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ற தகுதியற்ற கருத்துகள், படங்கள், வீடியோக்கள் வரும் என்பதால் குழந்தைகள் பார்க்கவும், கணக்கு வைக்கவும் தடை இருக்கிறது. இருப்பினும் குழந்தைகளுக்குக் கணக்கு இருக்கிறது என்பது வியப்புக்குரியது.

இந்த ஆய்வில் 10 வயதுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு சமூக ஊடங்களில் கணக்கு இருப்பது என்பது மற்றொரு அதிர்ச்சிக்குரியதாகும்.

ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளிடையே சமூக ஊடகமான ஃபேஸ்புக்கை 36.8 சதவீதம் பேரும், இன்ஸ்டாகிராமை 45.50 சதவீதம் பேரும் பயன்படுத்துகிறார்கள். ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 62.6 சதவீதம் பேர், தங்களின் பெற்றோர் ஸ்மார்ட்போன்களில் இருந்துதான் இன்டர்நெட் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் 8 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினரில் 30.2 சதவீதம் பேரிடம் சொந்தமாக ஸ்மார்ட்போன் இருக்கிறது. இவர்கள் இந்த ஸ்மார்ட்போனை அனைத்துவிதமான பயன்பாட்டுக்கும் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போனை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலான குழந்தைகள் அதாவது 94.8 சதவீதம் பேர் ஆன்லைன் வகுப்புக்கும், பாடங்களைக் கற்கவும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 52.9 சதவீதக் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள், இன்டர்நெட்டைத் தங்களுடைய நண்பர்களுடன், தோழிகளுடன் சாட்டிங் செய்யவே பயன்படுத்துவதாகவும், 10.1 சதவீதம் பேர் மட்டுமே கல்வி கற்கப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஸ்மார்ட்போன்களை மெசேஜ் அனுப்புவதற்கு 40 சதவீதம் பேரும், கல்வி தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு 31 சதவீதம் பேரும், பாடல்கள், இசை கேட்க 31.30 சதவீதம் பேரும், ஆன்லைன் கேம் விளையாட 20.80 சதவீதம் பேரும் பயன்படுத்துகிறார்கள்.

நாள்தோறும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்த ஆய்வுக்குக் குழந்தைகள் அளித்த பதிலில் 78.90 சதவீதம் குழந்தைகள் நாள்தோறும் குறைந்தபட்சம் 2 மணி நேரம், ஸ்மார்ட்போன் இன்டர்நெட் மூலம் ஆன்லைன் கேம் விளையாடுதல், பாடல் கேட்டல், சாட்டிங் உள்ளிட்டவற்றைச் செய்கிறார்கள்.

15.80 சதவீதம் குழந்தைகள் நாள்தோறும் 2 முதல் 4 மணி நேரம் வரை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார்கள், 5.30 சதவீதம் பேர் நாள்தோறும் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார்கள்.

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 76.20 சதவீதம் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுபோன்று படுக்கைக்குச் செல்லும் முன் ஸ்மார்ட்போன்களைக் குழந்தைகள் பார்ப்பதால், மனரீதியாக எதிர்மறையான விளைவுகள் குழந்தைகளுக்கு ஏற்படும், தூக்கம் பாதிக்கும், உடல்ரீதியான பாதிப்பு ஏற்படும், அச்ச உணர்வு, உடல் சோர்வு ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படுக்கையில் அமர்ந்தபின் 23.80 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள், வயது அதிகமாக அதிகமாக படுக்கைக்குச் சென்றபின்னும் ஸ்மார்ட்போன் பார்ப்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது.

13 சதவீதம் குழந்தைகள் படிக்கும்போது எப்போதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். 23.30 சதவீதம் பேர் அடிக்கடி பயன்படுத்துவதாகவும், 30.10 சதவீதம் பேர் எப்போதாவது பயன்படுத்துவேன் என்றும், 32.7 சதவீதம் குழந்தைகள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டும் ஸ்மார்ட்போனை எடுத்துப் பார்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளனர். சராசரியாக 37.15 சதவீதம் குழந்தைகள் எப்போதுமே ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார்கள். இதனால், படிப்பில் கவனக்குறைவு ஏற்படுவதை உணர்கிறார்கள்.

இன்டர்நெட் பயன்பாடு குறித்து குழந்தைகள் அளித்த பதிலில், 31.5% குழந்தைகள் இன்டர்நெட் அதிகமான அளவு தங்களின் புத்தாக்கத் திறனை வளர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 40.5 சதவீதம் பேர், பாதியளவு வளர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தங்களின் கல்வியில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக 29.7 சதவீதம் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். 43.7 சதவீதம் பேர் தங்கள் கல்வியில் பாதியளவு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பெரும்பாலான பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வியில் கரோனா எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவருகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களில் 54.1 சதவீதம் பேர், ஸ்மார்ட்போன்கள் வகுப்பில் சில கவனச்சிதறல்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 72.70 சதவீதம் ஆசிரியர்கள், ஸ்மார்ட்போன், இன்டர்நெட் பயன்படுத்துவது குறித்து இதற்கு முன் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களின் மிகப்பெரிய சவாலாக இருப்பது என்பது, ஸ்மார்ட்போன் மூலம் கற்கும் மாணவர்கள் உண்மையில் பாடங்களை கற்கிறார்களா என்று கண்காணிப்பது கடினமாக இருக்கிறது என 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x