Published : 26 Jul 2021 03:56 PM
Last Updated : 26 Jul 2021 03:56 PM

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு?- இதை எதற்காக செய்கிறார்கள்: காங்கிரஸ் சரமாரி கேள்வி

2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த மத்தியில் அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.

இதற்காக மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய உருவாக்கியுள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.889 கோடியாகும். முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும். கிடப்பில் இருந்த இத்திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் ஆயிரம் எம்.பி.க்கள் வரை அமரும் வகையில் இடவசதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்தநிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்த்த மத்தியில் அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

மணீஷ் திவாரி

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான மணீஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
வரும் 2024ம் ஆண்டுக்கு முன்பே மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவதற்கான திட்டத்துடன் மத்திய அரசு உள்ளது.

பாஜக எம்.பி.க்கள் இதனை உறுதிப்படுத்துகின்றனர். டெல்லியில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற மக்களவையில் 1000 எம்.பி.க்கள் அமரும் வசதியுடன் திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவில் உள்ள எனது நண்பர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.
ஆனால் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தும் முன்பாக தீவிர பொது விவாதம் அவசியம்.

இதை எதற்காக செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் மாநில சட்டப்பேரவைகளை கலைப்பது உட்பட அரசியல் சட்டம் வழங்கியுள்ள பல அதிகாரங்களை செயல்படுத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதுபோன்ற சூழலில் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் பாதிப்பை ஏற்படுத்துமா?

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்த்தப்பட்டால் அதற்குள் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x