பெகாசஸ் ஒட்டுகேட்பு;  எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடங்கியது

பெகாசஸ் ஒட்டுகேட்பு;  எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடங்கியது
Updated on
1 min read

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விவாதம் நடத்த வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

பெகாசஸ் ஒட்டுகேட்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலேயே இந்த விவகாரத்தை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. மாநிலங்களவை இன்று காலை கூடியது முதலே அமளி ஏற்பட்டது. அடுத்தடுத்து அவை ஒத்து வைக்கப்பட்டது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

மாலை 4 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. அதுபோலவே மக்களவையிலும் இந்த விவகாரத்தால் அமளி ஏற்பட்டது. பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விவாதம் நடத்த வேண்டும் என மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பிற்பகல் 2:45 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் இந்த பிரச்சினையை எழுப்பினர். இதனால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளி தொடர்ந்ததால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மாநிலங்களவை கூடியதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் அமளி நீடித்த நிலையில் 4 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in