Last Updated : 26 Jul, 2021 02:45 PM

 

Published : 26 Jul 2021 02:45 PM
Last Updated : 26 Jul 2021 02:45 PM

நாட்டிலேயே முதல்முறை: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க ஆணையம் அமைப்பு: முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

கொல்கத்தா

நாட்டிலேயே முதல்முறையாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மவுனம் சாதித்து வரும் நிலையில், மே.வங்க அரசு துணிச்சலாக விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்று எதிர்க்கட்சித் தலைவர்களையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்புக்கு முன்பாக, விசாரணை ஆணையத்தை அமைத்துவிட்டு மம்தா புறப்படுகிறார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்நிலையில் விசாரணை ஆணையம் அமைத்தது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்போர்கூட கண்காணிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை அமைக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு உத்தரவிடும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், அது நடக்கவில்லை, மத்திய அரசு அமைதியாக உட்காரந்திருக்கிறது. ஆதலால், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை நாட்டிலேயே முதல்மாநிலமாக மே.வங்கம் அமைத்துள்ளது. இது சின்ன முயற்சிதான், இதைப் பார்த்து மற்ற மாநிலங்கள் விழித்துக்கொள்ளட்டும். இந்த ஆணையம் விரைவாக விசாரணையைத் தொடங்க வேண்டும், மே.வங்கத்தில் ஏராளமானோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் ஆணையம் செயல்படும். இந்த ஆணையம் சட்டவிரோத ஹேக்கிங், கண்காணித்தல், உளவு பார்த்தல், செல்போன் அழைப்புகளை பதிவு செய்தல் தொடர்பாக விசாரிக்கும். விசாரணைச் சட்டம் 1952ன் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியும் பெகாசஸ் உளவு செயலால் கண்காணிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கசிந்த நிலையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x