Published : 26 Jul 2021 12:16 PM
Last Updated : 26 Jul 2021 12:16 PM

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும், ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கப்போவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

ஜூலை 26-ம் தேதி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.

அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளேன். அதன்பிறகு கட்சித் தலைமை முடிவு செய்யும். கட்சிக்காக விசுவாசத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன். அனைவரும் எனக்கு ஒத்துழைப்ப அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x