Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்துகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேகாலயாவின் சோரா பகுதியில் தரிசு நிலத்தை வனப்பகுதியாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மேகாலயாவில் சோரா என்றழைக்கப்படும் சிரபுஞ்சியில் ஆண்டு முழுவதும் மழை பெய்தது. ஆனால் பருவநிலை மாறுபாட்டால் தற்போது மழைப்பொழிவு குறைந்திருக்கிறது. பருவநிலை மாறுபாடு பிரச்சினைக்கு தீர்வு காண மேகாலயா அரசும், மத்திய அரசும் இணைந்து சோரா பகுதியில் தரிசு நிலத்தை வனப்பகுதியாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில் 1,000 ஹெக்டேர் நிலத்தில் 10 லட்சம் மரங்கள் நடப்படும். இதில் 80 சதவீத மரங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும் மரங்களாக இருக்கும். 20 சதவீத மரங்கள் கால்நடைகள், பூ, மூலிகை சாகுபடி சார்ந்ததாக இருக்கும். புதிய வேளாண் நுட்பத்தில் வனப் பகுதியை உருவாக்குகிறோம். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்களைப் பேண வேண்டிய அவசியம் இருக்காது. அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றுவார்கள்.
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்துகிறார். பிரதமரின் வழிகாட்டுதலின்படி கரியமில வாயுவைகட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏழைகளுக்கு சமையல் காஸ்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் முயற்சியால் நீர்மின் திட்டங்கள், சூரிய மின்திட்டங்களில் இந்தியா முன்னோடியாக உள்ளது. சர்வதேச அளவில் பருவநிலை மாறுபாட்டை தடுக்க பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த பிரதமர் உறுதி பூண்டுள்ளார்.
நாடு முழுவதும் மத்திய பாதுகாப்புப் படைகள் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.48 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளன. இன்றைய தினத்தில் மட்டும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 16.31 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேகாலயாவில் சோரா குடிநீர் திட்டம், வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் ஐஎஸ்பிடி பேருந்து சேவை திட்டம், உம்பாலி மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT