Published : 23 Jul 2021 01:23 PM
Last Updated : 23 Jul 2021 01:23 PM

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து பதவியேற்பு; விழாவில் அம்ரீந்தர் சிங்கும் பங்கேற்பு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சியில் அம்ரீந்தர் சிங்கும் கலந்து கொண்டார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்தது. முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தார்.

வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர்சிங்கை சித்து கடுமையாக விமர்சித்து வந்தார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சியை மேலும் பலவீனமாக்கியது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும், சித்துவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் என இரு பிரிவாகச் செயல்பட்டனர்.

இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கட்சி மேலிடம் தலையிட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, முதல்வர் அம்ரீந்தர் சிங்கும், நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர்.

பின்னர் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சங்கத் சிங் கில்சியான், சுக்வீந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சித்து இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். கட்சித் தலைமை அலுவலகம் வந்த அவரை அனைவரும் வரவேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் அம்ரீந்தர் சிங்கும் கலந்து கொண்டார்.

எம்எல்ஏ மற்றும் எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இதன்மூலம் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வந்த உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x