Published : 23 Jul 2021 12:20 PM
Last Updated : 23 Jul 2021 12:20 PM

‘‘எனது போன் ஒட்டுக்கேட்பு; அமித் ஷா பதவி விலக வேண்டும்’’ - ராகுல் காந்தி கடும் சாடல்

எனது அனைத்து போன்களும் கண்டிப்பாக ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன, இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விலக வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

பிரான்ஸைச் சேர்ந்த அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இந்த ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளன. நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெகாசஸ் மென்பொருளை ஆயுதமாக இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ளது. அதனை தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். ஆனால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்திய மாநிலங்கள் மற்றும் அரசு அமைப்புக்கு எதிராக பயன்படுத்தி உள்ளனர். அரசியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பெகாசஸ் மூலம் அனைத்து தரப்பினரும் உளவுபார்க்கப்பட்டு உள்ளனர். எனது மொபைல்போனும் கண்டிப்பாக ஒட்டுக் கேட்கப்பட்டு உள்ளது. எனது அனைத்து போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. ஊழலுக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும். தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x