Published : 23 Jul 2021 12:00 PM
Last Updated : 23 Jul 2021 12:00 PM

அமைச்சர் கையில் இருந்த காகிதங்களை பறித்து கிழித்து எறிந்த திரிணமூல் எம்.பி. சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வின் கையில் இருந்த காகிதங்களை பறித்து கிழித்து எறிந்த திரிணமூல் எம்.பி. சாந்தனு சென் மழைகாலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாநிலங்களவையில் நேற்று பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தபோது விளக்கம் அளிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் எழுந்தார்.

அப்போது, அவர் கையில் வைத்திருந்த காகிதங்களை பறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கிழித்து எறிந்தார். இதையடுத்து, அவையில் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவி அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமி்ட்டதால் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வின் கையில் இருந்த காகிதங்களை பறித்து கழித்து எறிந்த திரிணமூல் எம்.பி. சாந்தனு சென் செயல் பெரும் கண்டனத்துக்குரியது, அவமரியாதைக்குரியது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வெங்கய்ய நாயுடு

இதனையடுத்து சாந்தனுவை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

‘‘மாநிலங்களவையில் நேற்று நடந்த சம்பவங்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சர் கையில் இருந்த காகிதங்களை கிழித்து எறிந்த செயல் அவையில் இதுவரை இல்லாத அளவு நடந்த மோசமான சம்பவமாகும். நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இழுக்கானது. துரதிருஷ்வசமானது’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சாந்தனுவை மழைகாலக் கூட்டத்தொடர் முழுவதும் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x