Last Updated : 23 Jul, 2021 09:13 AM

 

Published : 23 Jul 2021 09:13 AM
Last Updated : 23 Jul 2021 09:13 AM

மத்திய அமைச்சர் அஸ்வினுக்கு அவமதிப்பு: திரிணமூல் எம்.பி.சஸ்பெண்ட் செய்யப்படுவாரா ?

மாநிலங்களவை | கோப்புப்படம்

புதுடெல்லி


மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கையில் வைத்திருந்த இருந்த ஆவணங்களை பறித்துக் கழித்து எறிந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஷாந்தனுவை சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

மாநிலங்களவையில் நேற்று பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தபோது விளக்கம் அளிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் எழுந்தார்.

அப்போது, அவர் கையில் வைத்திருந்த காகிதங்களை பறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஷாந்தனு சென் கிழித்து எறிந்தார். இதையடுத்து, அவையில் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவி அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமி்ட்டதால் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வின் கையில் இருந்த காகிதங்களை பறித்து கழித்து எறிந்த திரிணமூல் எம்.பி. ஷாந்தனு சென் செயல் பெரும் கண்டனத்துக்குரியது, அவமரியாதைக்குரியது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதலால், ஷாந்தனுவை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு இன்று அவையில் கொண்டுவரும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்மானத்தை மத்திய அமைச்சர் வி. முரளிதரன் அறிமுகம் செய்வார் எனத் தெரிகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகையில் “ நாடாளுமன்றத்தின் மாண்பையும், புனிதத்தன்மையையும் குலைக்கும் வகையில் நடந்துகொள்ளும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலங்களவைத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சி எம்.பி.க்களைச் சந்தித்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், முக்தர் அப்பாஸ் நக்வி இருவரும், பெகாசஸ் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதில் அளிக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் வைஷ்னவ் தன்னுடைய கருத்துக்களையும், அறிக்கையையும் முழுமையாக அவையில் படிக்கவோ, வாசிக்கவோ நேற்று முடியாத அளவுக்கு அவையில் குழப்பம் நீடித்தது. ஆளும் கட்சி எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அவையில் சூடான வார்த்தைகளால் வாக்குவாதம் செய்ததால், அவை வேறுவழியி்ன்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே திரிணமூல் எம்பி. ஷாந்தனு சென், கூறுகையில் “ மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி தன்னை அவதூறாகப் பேசினார். தன்னை சக எம்.பி.க்கள் அழைத்து செல்லும்முன் தன்னை தாக்கினார்” என குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆனால், இதற்கு மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் தரப்பில் விளக்கம் ஏதும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x