Last Updated : 23 Jul, 2021 08:44 AM

 

Published : 23 Jul 2021 08:44 AM
Last Updated : 23 Jul 2021 08:44 AM

58 நாட்களில் 645 குழந்தைகள் கரோனாவில் பெற்றோரை இழந்தனர் : மத்திய அரசு தகவல்


2021 ஏப்ரல் முதல் மே மாதம் 28ம் தேதிக்குள் 645 குழந்தைகள் தங்கள் பெற்றோரை கரோனா 2-வது அலையில் இழந்துள்ளனர் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா 2-வது அலையில் எத்தனை குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற கேள்விக்கு, மாநிலங்களவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று பதில் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

கரோனா 2-வதுஅலையில் கடந்த ஏப்ரல் முதல் மேமாதம் 28ம் தேதிவரையிலான 58 நாட்களில் நாட்டில் 645 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 158 குழந்தைகளும், ஆந்திராவில் 119 குழந்தைகளும், மகாராஷ்டிாவில் 83 குழந்தைகளும், மத்தியப்பிரதேசத்தில் 73 குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பள்ளி கல்வித்துறை, கல்வித்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வியை தொடர்ந்து வழங்கிட வேண்டும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிட வேண்டும் என மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் அனைத்து அமைச்சகங்களும் இணைந்து கேட்டுக்கொண்டுள்ளோம்.

இது தவிர கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலனுக்காக பிரதமர் மோடியும் சிறப்பு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார் அந்தத் திட்டமும் தொடரும். இந்தத் திட்டத்தின் கீழ் பெற்ரோரை இழந்த குழந்தைக்கு 18 வயதுவரை இலவச கல்வி, சுகாதார வசதிகளும், ரூ.10 லட்சம் வைப்பு நிதியும் வழங்கப்படும்.

18வயதுவரை ரூ.10 லட்சத்திலிருந்து கிடைக்கும் வட்டி அந்த குழந்தையின் பராமரிப்புக்கு பயன்படும், 18வயது நிறைவடைந்தபின், அந்த குழந்தையின் உயர்கல்விக்கும், 23வயதுக்குப்பின் அந்த குழந்தையின் தனிப்பட்ட வளர்ச்சி அல்லது தொழில் தொடங்கவும் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x