Published : 22 Jul 2021 06:31 PM
Last Updated : 22 Jul 2021 06:31 PM

பெகாசஸ் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்தது யார்?- மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

புதுடெல்லி

பெகாசஸ் தொடர்பாக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், உத்தரவு பிறப்பித்தது யார் என கூறியுள்ளார்.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பெகாசஸ் தொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

உத்தரவு இல்லாமல் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று அரசு சொல்கிறது. அப்படியென்றால், உத்தரவு பிறப்பித்து உளவு பார்த்தோம் என்று அரசு ஒப்புக்கொள்கிறதா?

உத்தரவு பிறப்பித்தது யார்? எந்த உளவு மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்த்தார்கள்?

அந்த மென்பொருளின் பெயர் என்ன? எந்த நாட்டு நிறுவனத்திடமிருந்து என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவார்களா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x