Published : 22 Jul 2021 03:42 PM
Last Updated : 22 Jul 2021 03:42 PM

கரோனா உயிரிழப்பு; முறையாக பதிவு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கரோனா உயிரிழப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் விடப்பட்டிருந்தால் அவற்றை முறையாக பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பெருந்தொற்றால் நிகழ்ந்த உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாகவும் ஒருசில ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

அண்மையில் வெளியிடப்பட்ட சில ஆய்வுகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வயது சார்ந்த தொற்றால் உயிரிழப்பது முதலியவற்றை மேற்கோள்காட்டி இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக இந்த செய்திகள் தெரிவித்துள்ளன.

இனம், மக்கள் தொகையின் மரபணு, இதற்கு முன்பு இதர நோய்களால் ஏற்பட்ட பாதிப்பு, சம்பந்தப்பட்ட மக்கள்தொகையில் நோயெதிர்ப்புச் சக்தியின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நேரடி மற்றும் மறைமுக காரணிகளுக்கு இடையிலான இடைவெளியை நிராகரித்து, எந்த ஒரு பாதிக்கப்பட்ட நபரும் உயிரிழப்பதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்ற அனுமானத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.

செரோ பரவல் ஆய்வுகள் பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய மக்களிடையே தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் உத்திகளை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுவதுடன், இறப்புகளை அதிகப்படுத்துவதற்கான மற்றொரு அம்சமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதிகரிக்கப்பட்ட உயிரிழப்பின் இலக்கங்கள் அனைத்தும் கோவிட் தொற்றினால் ஏற்பட்ட இழப்புகளாக அறிக்கையில் கருதப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது, அடிப்படை உண்மை இல்லாதது.

பிரதிநிதித்துவப் படம்

இந்தியாவின் வலுவான மற்றும் விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உயிரிழப்பு பதிவினால், தொற்று நோய் மற்றும் அதன் மேலாண்மை கொள்கையின்படி ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்படாமல் இருக்கலாம், ஆனால் உயிரிழப்புகளைத் தவற விடுவதற்கான வாய்ப்பு இல்லை. 2020 டிசம்பர் 31 நிலவரப்படி உயிரிழப்பு விகிதம் 1.45%ஆக இருந்தது. 2021 ஏப்ரல்- மே மாதங்களில் இரண்டாவது அலையில் எதிர்பாராத அதிகரிப்பு ஏற்பட்டபோதும் இன்று உயிரிழப்பு விகிதம் 1.34%வே உள்ளது.

பாதிப்புகள் மற்றும் இழப்புகள் பற்றி மாநில அரசுகளுக்கும், மாநில அரசுகள் மூலம் மத்திய அமைச்சகத்திற்கும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ‘இந்தியாவில் ஏற்படும் கோவிட்-19 சம்பந்தமான உயிரிழப்புகளைத் துல்லியமாக பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை’ கடந்த ஆண்டு மே மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சரியான உயிரிழப்புகளை பதிவு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மக்களவையில் இதுபற்றி, தனது அறிக்கையில் கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் மாநில அரசுகள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே கொவிட்-19 உயிரிழப்புகளை மத்திய அரசு தொகுத்து வெளியிடுவதாகக் கூறினார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி உயிரிழப்புகளை பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பல்வேறு வழிகளில் மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை அன்றாடம் தொடர்ந்து கண்காணிக்குமாறும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் பதிவு செய்யத் தவறியிருந்தால் அதனைத் தடுப்பதற்காக தங்களது மருத்துவமனைகளில் முழு ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு தரமான மருத்துவ மேலாண்மை வழங்குவதில் முழு மருத்துவ அமைப்பு முறையும் கவனம் செலுத்தி வந்தது. சரியான பதிவுகளில் தவறு ஏற்பட்டிருக்கலாம், மகாராஷ்டிரா, பிஹார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அண்மையில் தங்களது மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் திருத்தம் ஏற்படுத்தி இருப்பதன் மூலம் இது தெளிவாகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x