Published : 22 Jul 2021 01:17 PM
Last Updated : 22 Jul 2021 01:17 PM

‘‘ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு ஜே.பி.நட்டாவின் முடிவை ஏற்று செயல்படுவேன்’’- எடியூரப்பா திட்டவட்டம்

ஜூலை 26-ம் தேதி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது, ஜே.பி.நட்டாவின் முடிவை ஏற்று செயல்படுவேன் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.

அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் 2 ஆண்டுகள் நிறைவுக்கு பிறகு கட்சித் தலைமையின் முடிவுபடி செயல்படுவதாக அவர் திட்டவட்டமாக மீண்டும் கூறியுள்ளார். இதுகுறித்து எடியூரப்பாக கூறியதாவது:

ஜூலை 26-ம் தேதியுடன் கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன்பிறகு என்ன முடிவு என்பதை ஜே.பி.நட்டா முடிவு செய்வார். அதனை நான் பின்பற்றுவேன்.

பாஜகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்வதே எனது பணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சித் தொண்டர்கள், மடாதிபதிகள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x