Published : 20 Jul 2021 05:12 PM
Last Updated : 20 Jul 2021 05:12 PM

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றக்கூடாது: 30 மடாதிபதிகள் வலியுறுத்தல்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று 30 மடாதிபதிகள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.

அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

இந்நிலையில் எடியூரப்பா நேற்று தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநில விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

அதேசமயம் தனது மகன் விஜேயேந்திராவுக்கு கர்நாடக மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என எடியூரப்பாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அம்மாநிலத்தைச் சேர்ந்த 30 முக்கிய மடங்களைச் சேர்ந்த மாடதிபதிகள் இன்று சந்தித்து பேசினர்.

அவருக்கு தங்களின் ஆதரவை அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். திங்களேஷவர் சுவாமி கூறியதாவது:

பாஜக தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதனை தலை வணங்கி ஏற்பதாக எடியூரப்பா கூறினார். ஆனால் கர்நாடகாவில் பாஜக தற்போது பதவியில் இருப்பதற்கு காரணமே எடியூரப்பாவும், அவருக்கு உதவியாக கட்சியில் செயலாற்றி வருபவர்களும் தான்.

இதற்கு முன்பு கூட எடியூரப்பா தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. தற்போது கூட அந்த வலி இருப்பதை எங்களால் உணர முடிகிறது. எடியூரப்பா மாற்றப்பட்டால் இந்த மாநிலத்தில் பாஜக அழிந்து விடும். இதனை நாங்கள் மட்டும் கூறவில்லை. மாநில மக்களும் இதனைத் தான் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x