Published : 20 Jul 2021 03:11 PM
Last Updated : 20 Jul 2021 03:11 PM

‘‘கேரள அரசின் நடவடிக்கை வருந்தத்தக்கது’’ -  பக்ரீ்த் பண்டிகைக்கு ஊரடங்கில் தளர்வு: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரளாவில் கரோனா பாதிப்பு குறையாத நிலையில் பக்ரீ்த் பண்டிகைக்கு ஊரடங்களில் 3 நாட்கள் தளர்வுகள் அளித்த விவகாரத்தில் அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று குறையாத மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். இதனால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்படவில்லை. நாள்தோறும் 10 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் கரோனாவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தச் சூழலில் வரும் 20 அல்லது 21 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக 18 முதல் 20ம் தேதிவரை ஊரடங்கில் தளர்வுகளை கேரள அரசு அறிவித்தது. துணிக்கடை, செருப்புக்கடை, மின்னணுப் பொருட்கள், நகைக்கடை உள்ளிட்ட கடைகள் இரவு 8 மணிவரை திறக்க அனுமதித்தது.

கேரள அரசின் இந்த உத்தரவுக்கு மாநிலத்தின் மருத்துவர்கள் கூட்டமைப்பு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன. இதுபோன்ற தளர்வுகள் கரோனா பரவலை மேலும் அதிகப்படுத்தும் என்று எச்சரித்தன.

இந்நிலையில் பி.கே.டி நம்பியார் என்பவர் தரப்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங் உச்ச நீதிமன்றத்தில், கேரள அரசின் ஊரடங்கு தளர்வுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் எப் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:

வணிகர்களின் கோரிக்கையை ஏற்று ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதாக கேரள அரசு கூறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றதாகும். வாழும் உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

இதனை பாதுகாக்க பெருந்தொற்று காலத்தில் தேவையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தவது அரசின் கடமை. இந்த விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வருந்ததக்கதாகும். அரசியல் அழுத்தங்களுக்கு கேரள அரசு 3 நாள் தளர்வை அறிவித்துள்ளது தவறானது.

கன்வர் யாத்திரை வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள எங்கள் உத்தரவுகளை பின்பற்றவும் நாங்கள் கேரளாவை வலியுறுத்துகிறோம். இன்று அதன் கடைசி நாள் என்பதால் இனி அதை ரத்து செய்தால் எந்த பயனும் இல்லை. இந்த தளர்வின் காரணமாக யாருக்காவது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x