Last Updated : 20 Jul, 2021 10:58 AM

 

Published : 20 Jul 2021 10:58 AM
Last Updated : 20 Jul 2021 10:58 AM

மருத்துவமனைகள் பெரிய தொழிற்சாலைகளாக மாறியுள்ளன; மனித துயரத்தில் செழித்து வளர்கின்றன: உச்ச நீதிமன்றம் காட்டம்

நாட்டில் உள்ள மருத்துவமனைகள் பெரிய தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. மனிதர்களின் துயரத்தில் செழித்து வளர்கின்றன. அதற்கு பதிலாக அந்த மருத்துவமனைகளை மூடிவிடலாம் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளது.

நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாதது, கரோனாவில் உயிரிழந்த உடல்களை கண்ணியமாகக் கையாளாதது, மருத்துவமனைகளில் சமீபகாலங்களாக ஏற்பட்ட தீ விபத்துகள், அதில் உயிரிழந்த கரோனா நோயாளிகள் குறித்து தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஆண்டு குஜராத், மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடந்த தீ விபத்துகளில் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் வழக்காக எடுத்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எம்ஆர் ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது நாட்டில் மருத்துவமனைகள் நிலைமை, தீ தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாதது குறித்து நீதிபதிகள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எம்ஆர் ஷா அமர்வு கூறியதாவது:

''நாட்டில் உள்ள மருத்துவமனைகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்களாக நாங்கள் பார்ப்பதா அல்லது மனிதர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களாகப் பார்ப்பதா? மனிதர்களின் துயரத்தில் செழித்து வளர்ந்து, மருத்துவமனைகள் பெரிய தொழிற்சாலைகளாக மாறியிருக்கின்றன.

மனிதர்களின் உயிரை விலையாகக் கொடுத்து மருத்துவமனைகள் வளர்வதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது. அதுபோன்று வளரத் துடிக்கும் மருத்துவமனைகளை மூடிவிடலாம், அதற்கு பதிலாக மாநில அரசு தேவையான மருத்துவக் கட்டமைப்பை மக்களுக்கு உருவாக்கலாம். 4 அறைகளை மட்டும் வைத்துக்கொண்டு மருத்துவமனை என்று சொல்வதை அனுமதிக்க முடியாது.

ஏராளமான மருத்துவமனைகளில் தீ தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் கரோனாவில் இருந்து ஒரு நோயாளி மீண்டு வந்து, மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படும் சூழலில் அங்கு நடந்த தீ விபத்தால் அவர் உயிரோடு எரிந்துள்ளார், செவிலியர்களும் தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற சோகங்கள் எல்லாம் நம் கண்ணுக்கு முன் நடந்துள்ளன. இதுபோன்ற மருத்துவமனைகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களா அல்லது மனிதர்களுக்கு சேவை செய்யும் மருத்துவமனைகளா?.

மருத்துவமனைகள் தீ தடுப்பு விதிகளைப் பின்பற்ற 2022-ம் ஆண்டு வரை குஜராத் அரசு அவகாசம் கொடுத்துள்ளது என்றால், தொடர்ந்து மக்கள் தீ விபத்துகளால் பலியாகிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றுதானே அர்த்தம். தீ விபத்து நடந்த மருத்துவமனைகள் குறித்த விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கையில் அப்படி என்ன அணு ஆயுத ரகசியம் இருக்கிறது?

குஜராத் மற்றம் மகாராஷ்டிராவில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தீ தடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தணிக்கை செய்யவேண்டும்''.

இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

இந்த வழக்கை இரு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி உத்தரவிட்ட நீதிபதி சந்திரசூட், ஒவ்வொரு மருத்துவமனையிலும் தீ தடுப்பு பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்ற வேண்டும், இதைக் கண்காணிக்க தனியாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டார். தீ தடுப்பு அதிகாரியிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறாவிட்டால், அந்த மருத்துமனையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x