Published : 20 Jul 2021 09:11 AM
Last Updated : 20 Jul 2021 09:11 AM

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி நீக்குங்கள், பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்துங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல்புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது சுர்ஜேவாலா கூறியதாவது:

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு செயலி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இந்த விவாதத்தை எவ்வாறு கையாள்வது குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்திய பாதுகாப்புப் படைகள், கேபினெட் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களை வெளிநாட்டு உளவு செயலி மூலம் உளவு பார்த்தது என்பது, தேசத்துரோகம் மட்டுமல்ல, தேசப்பாதுகாப்புக்கு மன்னிக்க முடியாத விதிமுறை மீறல்.

அரசியலமைப்புச் சட்டம் காலில்போட்டு மிதிக்கப்பட்டுள்ளது, சட்டத்தின் ஆட்சி கொலை செய்யப்பட்டுள்ளது, பிரதமர், உள்துறை அமைச்சர், இந்த அரசின் பதவிப் பிரமாணம் என்பது பொய்யானது என்பது தெரிந்துவிட்டது ” இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்

மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் “சட்டத்தின்படி நீங்கள் அரசை நடத்த முடியாது என்றால், அந்த இடத்தை நீங்கள் ஆக்கிரமித்துள்ளீர்கள் என்றுதான் அர்த்தம்.பெகாசஸ் உளவு செயலியை வாங்குவதற்கு உள்துறை அமைச்சர் அல்லது பிரதமர் இருவரில் யார் உத்தரவிட்டது, எவ்வளவு பணம் இதற்காகச் செலவிடப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x