ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் லஷ்கர் கமாண்டர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் லஷ்கர் கமாண்டர் சுட்டுக்கொலை
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் லஷ்கர் –இ-தொய்பா அமைப்பின் உயர் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டம், செக் சாதிக் கான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு அங்கு விரைந்தனர். இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப் பின் உயர் கமாண்டர்களில் ஒருவரான இஷ்ஃபக் தார் என்கிற அபு அக்ரம் ஆவார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிராந்தியத்தில் செயல்பட்டு வருகிறார். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றிய இவர், கடந்த 2017—ல் பணியை விட்டு விலகி தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார். தெற்கு காஷ்மீரில் ஜனிபோரா கிராமத்தில் கடந்த 2018-ல் 4 போலீஸார் கொல்லப்பட்டதில் இவருக்கு தொடர்பு உள்ளது.

பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல்கள், அப்பாவி மக்கள் கொலை, இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றுதல் ஆகியவற்றை திட்டமிட்டுவதிலும் செயல்படுத்துவதிலும் அபு அக்ரம் முக்கிய கருவியாக இருந்தார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in