Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா?- வாரியத் தலைவர் பதவி பறிப்பால் புதிய எதிர்பார்ப்பு

ரோஜா

திருப்பதி

நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா, வாரியத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் அமைச்சராகலாம் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என பெயர் பெற்ற நடிகை ரோஜா, முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சட்டப் பேரவைக்கு 2 முறை போட்டியிட்டு தோல்வியுற்றார்.

பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், கடந்த 2014 சட்டப்பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கா ரெட்டிக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் சித்தூர் மாவட்டத்தில் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி , நாராயணசாமி ஆகிய இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தின் தலைவராக ரோஜா நியமிக்கப்பட்டார்.

இரண்டரை ஆண்டுகள் கழித்து கண்டிப்பாக அமைச்சரவை விரி வாக்கம் இருக்கும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அப்போது அறிவித்தார். இந்நிலையில் ஜெகன் அரசு பதவியேற்று தற்போது 2 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் அமைச்சரவை மாற்றம் மற்றும் விரிவாக்கம் பற்றிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பல்வேறு எம்எல்ஏக்கள் வகித்து வந்த வாரியத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ரோஜாவின்பதவியும் பறிக்கப்பட்டிருப்பதை யாரும் எதிர்பார்க் கவில்லை.

எம்எல்ஏ என்பவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க வேண்டும் என்பது முதல்வர் ஜெகனின் குறிக்கோளாக இருப்பதால் ரோஜாவின் பதவி பறிக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் விரைவில் ஆந்திர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால், இதில் இணைவதற்கு வசதியாக ரோஜாபதவியில் இருந்து நீக்கப்பட் டுள்ளதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். ரோஜா அமைச்சர் ஆவாரா, இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x