Published : 19 Jul 2021 06:58 PM
Last Updated : 19 Jul 2021 06:58 PM

‘‘படுக்கையறை உரையாடல்களைக் கூட ஒட்டுக் கேட்கும் மத்திய அரசு’’- காங்கிரஸ் கடும் சாடல்

பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி படுக்கையறை உரையாடல்களைக் கூட மத்திய அரசு ஒட்டுக் கேட்கும் என விமர்சித்துள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இதுதொடர்பாக 'தி வயர்' இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது. ஃபர்மிடன் ஸ்டோரிஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டவிரோதமாக கண்காணிப்பது என்பது இந்தியாவில் சாத்தியமல்ல. இதனை ஆய்வு செய்து, சட்டவிரோத கண்காணிப்பு நடக்காமல் தடுக்கும் அளவுக்கு நமக்கு போதுமான செயல் திட்டம் உள்ளது. நமத நுாட்டில் நீண்டகாலமாக இதுபோன்ற அமைப்புகளை நாம் வலிமைப்படுத்தி வந்துள்ளோம். நமது சட்டங்களும் வலுவானவை.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் இரவு ஒரு இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. பெரும் குற்றச்சாட்டுக்களை கூறி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு வெளியானது தற்செயலானது அல்ல.

குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுவது எந்த ஆதாரமும் இல்லாதது. இதில் துளியும் உண்மையும் இல்லை. பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தி இதனை செய்வதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

எனினும் மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், மூத்த தலைவருமான ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாட்டின் பாதுகாப்பு ஒட்டு மொத்தமாக பறிபோயுள்ளது. இது தேசத்துரோகமானது. இந்தியர்களின் தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் திருடுவதற்கு மோடி அரசு அனுமதித்துள்ளது.

படுக்கையறை உரையாடல்களைக் கூட மத்திய அரசு ஒட்டுக் கேட்கும். மத்திய உள்துறை அமித் ஷாவே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் சட்டத்தின்படி பதவியேற்ற இருவரும் அதனை மீறி விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x