Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM
கர்நாடகாவில் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் தொடரும் மழையால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் காவிரி, கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மண்டியா மாவட்டத்தில் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 21 ஆயிரத்து 800 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 2 ஆயிரத்து 434 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2283.01 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 14 ஆயிரத்து 333 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 15 ஆயிரத்து 800 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே அளவுக்கு நீர்வரத்து தொடர்ந்தால் கபினி அணை ஓரிரு தினங்களில் முழு கொள்ளளவை எட்டும்.
இந்நிலையில் கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து மொத்த மாக தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித் துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT