Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மரணத்தில் இருந்து 99% பாதுகாப்பு கிடைக்கும்: தேசிய வைராலஜி மையம் நடத்திய ஆய்வில் தகவல்

புதுடெல்லி

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, இந்ததொற்றால் ஏற்படும் மரணத்தில் இருந்து 99 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்று தேசிய வைராலஜி மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் புனே நகரில் செயல்படும் தேசிய வைராலஜி மையம், கரோனா வைரஸ் பாதிப்புதொடர்பாக தேசிய அளவில் அண்மையில் ஆய்வு நடத்தியது. இந்த மையத்தின் இயக்குநர் பிரியா ஆபிரகாம், மூத்த விஞ்ஞானி பிரக்யா யாதவ் உள்ளிட்டோர் இந்த ஆய்வை நடத்தினர்.

இதுதொடர்பாக தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 677 பேரின் சளி மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 592 பேர் 2 தவணை தடுப்பூசியும் 85 பேர் ஒரு தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டவர்கள் ஆவர்.

ஒட்டுமொத்தமாக 677 பேரின்சளி மாதிரியை ஆய்வு செய்ததில்86.6 சதவீதம் பேர் கரோனாவின் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 677 பேரில் 67 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அந்த 3 பேரும் முதியவர்கள். பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதன் காரணமாகவே அவர்கள் உயிரிழக்க நேர்ந்தது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அபாயம் மிகவும் குறைவு ஆகும். குறிப்பாக தடுப்பூசி போட்ட பிறகு கரோனாவின் டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பில் இருந்து அவர்களுக்கு 99 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. டெல்டா தொற்று ஏற்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக் கப்படும் சூழல் ஏற்படுகிறது. இவை ஆய்வு முடிவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசியால் மட்டுமே கரோனா பரவலை தடுக்க முடியும். எனவே அனைத்து தரப்பு மக்களும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொள்வது அவசியம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை 2 தவணை தடுப்பூசிகளாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x