Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் குறுக்கே அணைகள் கட்டும் உரிமை இனி மத்திய அரசுக்கே: சட்டரீதியாக போராட தெலங்கானா முதல்வர் தீர்மானம்

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையால் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள் மீது அணைகள் கட்டும் அதிகாரத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியாக போராட்டம் நடத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.

கிருஷ்ணா நதிநீர் பகிர்ந்துகொள்வது தொடர்பாக தெலங்கானா மற்றும் ஆந்திர அரசு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் காரசாரமான விவாதங்களை முன்வைத்து வருகின்றனர். நாகார்ஜுன சாகரில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஸ்ரீசைலம் வழியாக ராயலசீமா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கிறது.

இதற்கிடையே தெலுங்கானா அரசு நாகார்ஜுன சாகர் அருகே லிப்ட் இரிகேஷன் மூலம் மின்சார உற்பத்தி செய்தது. இதனால் ஸ்ரீசைலம் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதன் காரணமாக ஆந்திராவில் உள்ள ராயலசீமா மாவட்டங்களான சித்தூர், கடப்பா, அனந்தபூர், கர்னூல் ஆகிய 4 மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பாசன நீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்த ஆந்திர முதல்வர் உடனடியாக தெலங்கானா, கிருஷ்ணா நதியிலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அறிவித்தார். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை தலைதூக்கியது. நாகார்ஜுன சாகர் மற்றும் சோமசீலா அணைகளில் இருபுறமும், இரு மாநில போலீஸாரும் குவிக்கப்பட்டனர். இருமாநில நீர்வளத்துறை அமைச்சர்களும் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர்.

இந்த பிரச்சினையில் கிருஷ்ணா நதிநீர் வாரியம் தலையிட வேண்டுமென ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனை பரிசீலித்த மத்திய ஜலசக்தித்துறை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள் மீதுள்ள உரிமையை தாமே எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.

இதற்கான அரசாணையையும் கடந்த வியாழன்று நள்ளிரவு அரசாணையில் வெளியிட்டது. வரும் அக்டோபர் மாதம் 24-ம் தேதிக்குள் இந்த இரு நதிகள் மீது கட்டப்பட்டு வரும் அணைப் பணிகளை இரு மாநிலங்களும் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சுமார் 107 தடுப்பணைகள் மற்றும் அணைகளை தெலங்கானா அரசு கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் மீது கட்டி வருகிறது. இப்பணிகள் தடைபடுவதால் தெலங்கானா மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவர் என அம்மாநில அரசு கருத்து தெரிவித்துள்ளது. மத்திய ஜலசக்தித் துறை அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து தெலங்கானா முதல்வர் அவசர அவசரமாக அமைச்சரவையை கூட்டினார்.

இதில் நதிநீர் பிரச்சினை, நீர் பங்கீடு ஜலசக்தி அரசாணைபோன்றவை ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், மத்திய அரசின் இந்தமுடிவை எதிர்த்து நாடாளுன்றத் திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே யும் போராடுவது எனதீர்மானிக்கப்பட்டது. இது தவிரசட்டரீதியாக இதனை எதிர்கொள்வோம் என்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x