Published : 17 Jul 2021 01:46 PM
Last Updated : 17 Jul 2021 01:46 PM

பிரதமர் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்து பேசினார்.

அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரச்சார வியூகம் அமைத்தார் பிரஷாந்த் கிஷோர்.

ஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.

மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடனும் சரத் பவார் ஆலோசனை நடத்தினார். பின்னர் சரத் பவார் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை பங்கேற்றன. கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல், உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

இதனிடையே சரத் பவாரை அடுத்த குடியரசுத் தலைவராக போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியானது. ஆனால் சரத்பவார் இதனை மறுத்தார்.

‘‘குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்று என்னை சொல்வது தவறு. ஒரு கட்சியில் 300 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருக்கும்போது தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்’’ எனக் கூறினார்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சரத்பவார் இன்று காலை சந்தித்துப் பேசினார். சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. அதேசமயம் சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திப்பு தொடர்பாக புகைபடத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவார் முன்மொழியப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தநிலையில் இந்த சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x