Published : 17 Jul 2021 09:47 AM
Last Updated : 17 Jul 2021 09:47 AM

மேகதாதுவில் புதிய அணை; 100 சதவீதம் உறுதி: எடியூரப்பா  திட்டவட்டம்

புதுடெல்லி

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது 100 சதவீதம் உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கினார்.

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார்.

மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க தமிழகத்திலுள்ள சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி குழுவினர் இன்று டெல்லி சென்று ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர். அப்போது மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கர்நாடக பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன். ஆனால் அந்த மாநிலம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில் பிடிவாதமாக உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதால் இரு மாநிலங்களுக்குமே நன்மையே ஏற்படும். மேகதாதுவில் புதிய அணை கட்டுவது 100 சதவீதம் உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x