Last Updated : 17 Jul, 2021 03:13 AM

 

Published : 17 Jul 2021 03:13 AM
Last Updated : 17 Jul 2021 03:13 AM

மகனுடன் டெல்லிக்கு அவசரமாக பயணம்- பிரதமர் மோடியை சந்தித்தார் எடியூரப்பா

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

பெங்களூரு

கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.

அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர் களை சமாதானப்படுத்தினார்.

இந்நிலையில் எடியூரப்பா நேற்று தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநில விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை இன்று எடியூரப்பா சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக்கூறுகையில், "இந்த டெல்லி பயணம் முதல்வரை மாற்றும் விவகாரம் இல்லை. எடியூரப்பா மீதமுள்ள ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடர்வார். மேகேதாட்டு திட்டத்தை அமல்படுத்த பிரதமர், அமைச்சர்களை சந்திக்கவே சென்றுள்ளார்’’ என்றார்.டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x