Last Updated : 16 Jul, 2021 05:12 PM

 

Published : 16 Jul 2021 05:12 PM
Last Updated : 16 Jul 2021 05:12 PM

உ.பி.யில் ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர்; 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் 

உத்தரப்பிரதேசத்தில் ரூ.5 கோடி பணயத்தொகை கேட்டு கடத்தப்பட்ட மருத்துவரை 24 மணி நேரத்தில் ஆக்ரா போலீஸார் மீட்டனர். இக்குழுவை பாராட்டி உ.பி.யின் டிஜிபி மற்றும் அரசு சார்பில் மொத்தம் ரூ.4 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவின் டிரான்ஸ் யமுனா காலனியில் வசிப்பவர் டாக்டர். உமாகாந்த் குப்தா. இவர் அதன் நெடுஞ்சாலையில் தனியாக ஒரு நர்ஸிங் ஹோம் நடத்தி வருகிறார்.

நேற்று முன் தினம் மாலை 7.30 மணிக்கு தனது நர்சிங் ஹோமிலிருந்து புறப்பட்ட உமாகாந்த் தன் வீடு வந்து சேரவில்லை. அடுத்து அவர் கடத்தப்பட்டதாகவும், டாக்டர்.உமாகாந்த்தை விடுவிக்க ரூ.5 கோடி பணயத்தொகை அளிக்கப்பட வேண்டும் எனக் கேட்டு போன் வந்தது.

இதனால், அன்று இரவு 11.00 மணிக்கு ஆக்ரா போலீஸாரிடம் அவரது மனைவி டாக்டர்.வித்யா குப்தா புகார் அளித்தார். டாக்டர்.உமாகாந்தை மீட்க ஆக்ராவின் எஸ்எஸ்பியான தமிழர் ஜி.முனிராஜ் உடனடியாக உத்தரவிட்டார்.

ஐபிஎஸ் அதிகாரியான முனிராஜின் நேரடிக் கண்காணிப்பில் ஆக்ரா நகர எஸ்பியான போத்ரே ரோஹன் பிரமோத் தலைமையில் ஒரு படை அமைக்கப்பட்டது. இப்படையினர் டாக்டர். உமாகாந்தின் காரை தோல்பூரில் கண்டுபிடித்தனர்.

இதை ஓட்டி வந்தவர் மூலம், டாக்டர்.உமாகாந்த் ராஜஸ்தானின் தோல்பூரில் இருப்பதாக அறிந்தனர். இவர், அங்குள்ள சம்பல் கொள்ளைக்காரர்களில் ஒருவரான பதன் சிங் தோமர் கும்பலால் கடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், ராஜஸ்தான் போலீஸாருடனும் இணைந்து அடுத்த 24 மணி நேரத்தில் டாக்டர் உமாகாந்த் மீட்கப்பட்டார். இதில் ஒரு இளம்பெண் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பலின் தலைவன் பதம் சிங் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறார். இவரது மற்ற சகாக்களை பற்றி துப்பு அளிப்போருக்கு ரூ.25,000 பரிசும் ஆக்ரா போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆக்ரா போலீஸாரிடம் மீட்கப்பட்ட பின் டாக்டர் உமாகாந்த் கூறும்போது ‘‘சுமார் 5 மாதங்களுக்கு முன் தனது சகோதரன் சிகிச்சைக்காக என மங்களா பட்டிண்டார் (30) எனும் விதவை வந்தார்.

பிறகு நட்புடன் பழகத் துவங்கியவர் உதவி கேட்டு பகவான் டாக்கீஸ் முன் அழைத்தார். அப்போது என்னை பின்தொடர்ந்த் ஒரு கும்பலால் நான் கடத்தப்பட்டு விட்டேன்’’ எனத் தெரிவித்தார்.

டாக்டர் உமாகாந்திற்காக கேட்கப்பட்ட பணயத்தொகை ரூ.5 கோடியில் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதற்கு முன் 2017 இல் இதே கும்பலால் ஆக்ராவின் மருத்துவர் நிகில் பன்ஸல் கடத்தப்பட்டார்.

இவரை பல லட்சம் கொடுத்து மீட்கப்பட வேண்டியதாயிற்று. எனவே, சம்பல் கொள்ளை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட செயலை பாராட்டி உபியின் டிஜிபி ஆக்ரா குழுவினருக்கு ரூ.2 லட்சம் பரிசாக அறிவித்துள்ளார்.

அதேசமயம், பாஜக ஆளும் உ.பி.யின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசும் ஆக்ரா குழுவினருக்கு ரூ.2 லட்சம் பரிசு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில், ஆக்ரா மாவட்ட எஸ் எஸ்பியான தமிழர் முனிராஜுக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

தர்மபுரியின் அக்ராஹாரப் பாப்பாரப்பட்டியை சேர்ந்த முனிராஜ் தன் அதிரடி நடவடிக்கைகளுக்காக ‘உ.பி. சிங்கம்’ என அம்மாநிலவாசிகளால் அழைக்கப்படுகிறார். இவரை தொடர்ந்து உ.பி.யின் முக்கிய மாவட்டங்களில் முதல்வர் யோகி பணியமர்த்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x