

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக வேவு பார்த்த ராணுவ வீரர், காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் பொக்ரான்பாலைவனத்தில் அணுகுண்டுகள், ஏவுகணைகளை சோதனை செய்யும் மையம் அமைந்துள்ளது. அங்கு ராணுவ முகாமும் செயல்படுகிறது. அந்த முகாமுக்கு ஹபிபர் ரஹ்மான் (34) என்பவர் காய்கறிகளை விநியோகம் செய்துவந்தார். அவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக வேவு பார்ப்பதை டெல்லி போலீஸார் அண்மையில் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி பொக்ரானுக்கு சென்ற டெல்லி போலீஸார், ரஹ்மானை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்ராவில் உள்ள ராணுவ முகாமில் எழுத்தராக பணியாற்றும் பரம்ஜித் என்பவரும் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்ப்பது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் கூறும்போது, "ராணுவ வீரர் பரம்ஜித், பொக்ரானில் பணியாற்றியபோது காய்கறி வியாபாரி ரஹ்மானுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஐஎஸ்ஐ அமைப்புக்காக வேவு பார்த்துள்ளனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.