Last Updated : 15 Jul, 2021 03:01 PM

 

Published : 15 Jul 2021 03:01 PM
Last Updated : 15 Jul 2021 03:01 PM

கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளியைக் குறைக்க மனு: டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி

கோவிஷீல்டு தடுப்பூசி தவணைக்கான இடைவெளியைக் குறைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இந்தியாவில் தயாரித்த கரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோஸ்களுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிக்கும்படி டாக்டர் என்.கே.அரோரா தலைமையிலான கோவிட் நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதை மத்திய அரசு கடந்த மே மாதம் ஏற்றுக்கொண்டது.

இந்த மாற்றத்தை அடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக மாற்றப்பட்டது. அதாவது தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் முதல் டோஸ் போட்ட தேதியிலிருந்து, குறைந்தபட்சம் 84 நாட்களுக்குப் பின்பே 2-வது டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முடியும்.

இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தவணைக்கான இடைவெளியைக் குறைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மருத்துவர் சித்தார்த் தே என்பவர் தாக்கல் செய்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மருத்துவர் சித்தார்த் தே சார்பில் வழக்கறிஞர் குல்தீப் ஜவ்ஹாரி வாதிடும்போது, ''பிரிட்டன் ஆய்வுகளின்படி, புதிய வகை கோவிட்-19 வைரஸ்களில் இருந்து காக்க தடுப்பூசிக்கான இடைவெளியைக் குறைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது நீதிபதிகள் டி.என்.படேல் மற்றும் ஜோதி சிங் ஆகியோர் கூறும்போது, ''தடுப்பூசி இடைவெளி நடைமுறை பற்றி ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா? தடுப்பூசி டோஸ்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன? இதை யார் செய்கிறார்கள்?

நாங்கள் இதுகுறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப விரும்பவில்லை. இந்த மனுவைத் தள்ளுபடி செய்வோம்'' என்று தெரிவித்தனர்.

இதையடுத்து ஜவ்ஹாரி, ''நேர்மையான முறையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இது'' என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், ''உங்களின் நேர்மையைச் சந்தேகிக்கவில்லை. எனினும் மனு தள்ளுபடி என்பது நேர்மையின்மைக்கான சான்றிதழ் அல்ல'' என்று தெரிவித்தனர்.

இதையடுத்து ஜவ்ஹாரி, மனுவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x