கரோனா காலத்தில் கன்வர் யாத்திரை ஏன்? - உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
கரோனா காலத்தில் கன்வர் யாத்திரையை ஏன் அனுமதிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐஎம்ஏ என அழைக்கப்படும் மருத்துவர் சங்கமும் கரோனா 3-வது அலை தொடர்பாக எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்த உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கன்வர் யாத்திரை என்பது பல பகுதிகளில் இருந்து ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் ஆண்டுதோறும் பாத யாத்திரயைாக செல்வது வழக்கம்.
கன்வர் யாத்திரையை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் கன்வர் யாத்திரை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடு்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு விசராணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:
கரோனா 3-வது அலையை தடுக்க மக்கள் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கரோனா விதிமுறை மீறலை நாம் ஒரு சதவீதம் கூட அனுமதிக்க முடியாது.
ஆனால் உத்தர பிரதேச அரசு இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்த அனுமதிக்கவுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. கரோனா காலத்தில் ஏன் இதனை அனுமதிக்க வேண்டும். தேவையில்லாமல் மக்களிடம் குழப்பம் ஏற்படும்.
எனவே இதுகுறித்து உத்தர பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும். இதுபோலவே உத்தரகாண்ட் மற்றும் மத்திய அரசும் இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
