

டெல்லியில் கடந்த சில நாட்கள் தாமதத்திற்கு பின் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது. இதனால், பல இடங்களில் கனமழை கொட்டியது.
நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. 10-ம் தேதியில் இருந்து நாடுமுழுவதும் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்து இருந்தது.
ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சமவெளி மற்றும் மலைகளில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு வானிலை எச்சரிக்கையும், ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்து இருந்தது.
இதன்படி கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலமாக மழை பெய்கிறது. அதுபோலவே வட மாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் மற்றும் பலத்த மழையில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோலவே இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு நேற்று மேகவெடிப்பு ஏற்பட்ட பலத்த மழை கொட்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், விடுதிகள் சேதமடைந்தன. கடைகள் சேதமடைந்தன.
டெல்லியில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.சப்தர் ஜங் பகுதியில் 2.5 செ.மீ. மழை பெய்தது. இதனால் காலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.