குழந்தைகள் சுகாதாரத்தில் கூடுதல் கவனம்: மத்திய அமைச்சர் மாண்டவியா உறுதி

குழந்தைகள் சுகாதாரத்தில் கூடுதல் கவனம்: மத்திய அமைச்சர் மாண்டவியா உறுதி
Updated on
1 min read

குஜராத் மாநிலம் பவ்நகரில் உள்ள தக்டாசின்ஜி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மருத்துவமனை படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் விநியோகம் போன்றவை குறித்து கரோனா 2-வது அலையில் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். கரோனாவால் ஏற்படும் நெருக்கடியான சூழலை சமாளிக்க ரூ.23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த நிதி மூலம் மருத்துவ உபகரணங்கள் வாங்க மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகள் சுகாதாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விரிவான திட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in