திருமலையில் அறைகள் ஒதுக்கும் புதிய திட்டத்துக்கு அமோக வரவேற்பு

திருமலையில் அறைகள் ஒதுக்கும் புதிய திட்டத்துக்கு அமோக வரவேற்பு
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்கள், தங்கும் அறைகள் எடுக்க சிரமங்களை சந்தித்து வந்தனர். அறைகள் பதிவு செய்ய, அறைகள் வாங்க, சாவி வாங்க என தனித்தனி வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில் பக்தர்களின் புகார் எதிரொலியாக புதிய நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த மாதம் கொண்டு வந்துள்ளது. இதன்படி திருமலையில் ஜிஎன்சி டோல்கேட், பாலாஜி பஸ் நிலையம், கவுஸ்தபம் தங்கும் விடுதி, ராம்பக்கீச்சா தங்கும் விடுதிகள், எம்பிசி உள்ளிட்ட 6 இடங்களில் அறைகள் பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டன.

பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் குறிப்பிட்ட நாளில் அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அதில் குறிப்பிட்டுள்ள இடத்துக்கு பக்தர்கள் சென்று, அந்த தகவலை காண்பித்து, அறைக்கான சாவியை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு மாறாக, நேரில் வரும் பக்தர்கள், இந்த 6 மையங்களில் ஏதேனும் ஒன்றில் ஆதார் அட்டையை காண்பித்து அறையை பதிவு செய்து கொள்ளலாம். அரை மணி நேரத்துக்குள் அவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு, அதற்கான தகவல் அவர்களின் செல்போனுக்கு சென்றுவிடும்.

பின்னர் பணம் செலுத்தி விட்டு, குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சாவியை பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய நடைமுறைக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அலைச்சல் இன்றி பதிவு செய்த அரை மணி நேரத்துக்குள் தங்கும் அறை கிடைத்து விடுகிறது என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in