Last Updated : 18 Feb, 2016 08:40 AM

 

Published : 18 Feb 2016 08:40 AM
Last Updated : 18 Feb 2016 08:40 AM

ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிமுகம்

இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ரூ.251 க்கு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3ஜி சேவைக்கு பயன்படுத்தும் விதமாக உள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு ஃபிரீடம்-251 என பெயரிடப்பட்டுள்ளது. 4 அங்குல தொடுதிரை, குவால்கம் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராஸசர்,1ஜிபி ராம் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்கு தளத்தைக் கொண்டு இயங்கும். போனில் 8ஜிபி சேமிப்பு வசதியும், 32 ஜிபி மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு வரை பயன்படுத்த முடியும். 3.2 மெகாபிக்ஸல் கேமராவுடன் இது வந்துள்ளது. 1,450 எம்ஏஹெச் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று மாலை இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தினார். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் வசதிகளாக பெண்கள் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, மீனவர்கள், விவசாயிகள், மருத்துவ சேவைக்கான செயலிகளும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளும் உள்ளன. இந்த நிறுவனம் ஏற்கெனவே ரூ.2,999 விலையில் 4ஜி சேவைக்கு ஏற்ற போனை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ரூ.1,500 வரையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட் போன்களை தயாரிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு தொழில்துறை ஊக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் பார்க்கப்படுகிறது.

ஜூன் 30-க்குள் டெலிவரி

இந்த பிரீடம் - 251 மலிவு விலை ஸ்மார்ட்போன் விற்பனைக்கான ஆன்லைன் புக்கிங் இன்று காலை 6 மணி முதல் தொடங்குகிறது. வருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் டெலிவரி செய்யப்பட்டுவிடும். இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு வருட வாரண்டியை அந்த நிறுவனம் அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 650 சேவை மையங்கள் உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x