Published : 12 Jul 2021 01:47 PM
Last Updated : 12 Jul 2021 01:47 PM

மின்னல் தாக்கி உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்: நிதியுதவி அறிவிப்பு

புதுடெல்லி

மின்னல் தாக்கியதால் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையையும் அறிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதுதொடர்பாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையமும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலமாக மழை பெய்கிறது. அதுபோலவே வட மாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. உத்தர பிரதேசத்தில் பிரயாகராஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மின்னலுடன் மழை கொட்டியது. இதில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதுபோலவே கான்பூர், தேஹத், பதேபூரில், கவுசாம், பிரோசாபாத், உன்னாவ், ஹமீர்பூர், சோன்பத்ரா, பிரதாப்கர் மிர்சாபூர் என பல இடங்களிலும் பலத்த மின்னலுடன் மழை பெய்தது.

உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கியதன் காரணமாக 41 பேர் இறந்துள்ளனர். ஆடு, பசு என கால்நடைகளும் கொல்லப்பட்டு உள்ளன. இதுபோலவே மத்திய பிரதேசத்தில் ஏழு பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுபோலவே ராஜஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் தாக்கி 7 சிறுவா்கள் உள்பட 20 போ் பலியாகினா். 21 போ் காயமடைந்தனா்.

அவர்களில் 11 பேர் சுற்றுலா பயணிகள் ஆவர். ஜெய்ப்பூரில் அம்பர் கோட்டை அருகே மலை பகுதியில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் உட்பட பலர் செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
மின்னல் தாக்கியதால் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து துயருற்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும்’’ என்று பிரதமர் மோடி சார்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x