Published : 12 Jul 2021 01:05 PM
Last Updated : 12 Jul 2021 01:05 PM

கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ்: மொத்தம் 18 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்

கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கேரளாவில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 13 பேரின் மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக கேரள அரசு அனுப்பி வைத்தது. கேரளாவில் ஜிகா வைரஸ் பரவியதை தொடர்ந்து 6 பேர் கொண்ட மத்திய குழு அம்மாநிலம் சென்று ஆய்வு செய்தது.

கேரளாவில் ஏற்கெனவே 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களது ரத்த மாதிரிகள் புனே அனுப்பப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் 3 பேருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

வீணா ஜார்ஜ்

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். திருவனந்தபுரம், திருச்சூர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் ஜிகா வைரஸ் பரிசோதனை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 8 மாதிரிகள் அனுப்பப்பட்டதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், 22 மாதக் குழந்தை, 45 வயது முதியர் மற்றும் 29 வயது சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x