Published : 11 Jul 2021 05:12 PM
Last Updated : 11 Jul 2021 05:12 PM

கரோனா உயிரிழப்புகளை மறைக்கும் யோகி அரசு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

கரோனா உயிரிழப்புகளை மறைத்து யோகி ஆதித்யநாத் அரசு நாடகமாடுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த மண்டலப் பஞ்சாயத்து தேர்தலில் 825 இடங்களுக்கு 635 இடங்களை பாஜக மற்றும் அப்னா தளம் கட்சிகள் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

சமீபத்தில் நடந்த ஜில்லா பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் 75 இடங்களில் பாஜக மற்றும் அப்னா தளம் கட்சிகள் சேர்ந்து 67 இடங்களைக் கைப்பற்றின.

ஆனால், பாஜக தலைமையிலான ஆளும் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலில் வலுக்கட்டாயமாக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்தநிலையில் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

உத்தர பிரதேச மாநிலத்தில், கரோனா உயிரிழப்புகளை யோகி ஆதித்யநாத் அரசு மறைத்து காட்டுகிறது. மாநில அரசு தரும் தகவல்கள் உண்மையில்லை. ஏராளமான பாதிப்புகள் உள்ளபோதிலும் அவற்றை மாநில அரசு பதிவு செய்யவில்லை. உயிரிழப்புகளும் குறைவாகவே காட்டப்படுகின்றன.

இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தினந்தோறும் மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். ஆனால் பொது மக்களுக்கு உதவும் எண்ணத்தில் பாஜக அரசு செயல்படவில்லை.

பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x