Published : 10 Jul 2021 11:42 AM
Last Updated : 10 Jul 2021 11:42 AM

கரோனா பரவல் முதலிடத்தில் கேரளா;  48 மணிநேரம் தளர்வில்லா ஊரடங்கு அமல்

கோப்புப் படம்

திருவனந்தபுரம்

நாட்டிலேயே கரோனா பரவல் முதலிடத்தில் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு ஒரே நாளில் 13,563 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 48 மணிநேர தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வரும் வேளையில் கேரளாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 1.01 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் 1.23 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 42,766 ஆக உள்ளநிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,55,033 ஆக குறைந்துள்ளது.

இதில் முதலிடத்தில் கேரளா உள்ளது. அங்கு 13,563 பேர் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது கேரளாவில் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 8,992 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,039 பேரும், கர்நாடகாவில் 2,290 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கடந்த ஜூன் 28-ம் தேதி, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 96,012 ஆக இருந்தது. இரு தினங்களுக்கு முன்பு 1.08 லட்சமாக அதிகரித்துள்ளது.

பெரிய மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றை தவிர நாட்டின் மற்ற மாநிலங்களில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

கேரளாவில் மட்டும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவில் கடந்த 10 நாட்களில் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 12 ஆயிரம் அதிகரித்துள்ள நிலையில், இது மூன்றாவது அலைக்கான அறிகுறியாக கூட இருக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.

ஏனெனில் நாட்டில் கரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் கேரளாவில் கடந்த 2020 ஜனவரியில் கண்டறியப்பட்டது. அதன்பிறகே பல மாநிலங்களில் பரவியது.

கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் , நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கோப்புப் படம்

மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x