‘‘டெண்டுல்கர் அடிக்கும் செஞ்சூரி போல உயரும் பெட்ரோல் விலை’’ - சத்தீஸ்கர் முதல்வர் கிண்டல்

‘‘டெண்டுல்கர் அடிக்கும் செஞ்சூரி போல உயரும் பெட்ரோல் விலை’’ - சத்தீஸ்கர் முதல்வர் கிண்டல்

Published on

பிரதமர் மோடியின் வயதை விடவும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து விட்டதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறினார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளதாவது:

‘‘பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலையும் மிக கடுமையாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை ஒரு சமயத்தில் பிரதமர் மோடியின் வயதை ஒத்து இருப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது பிரதமர் மோடியின் வயதை விடவும் அதிகரித்து விட்டது. டெண்டுல்கர் அடிக்கும் செஞ்சூரி போல பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது’’ எனக் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in