Last Updated : 09 Jul, 2021 05:09 PM

 

Published : 09 Jul 2021 05:09 PM
Last Updated : 09 Jul 2021 05:09 PM

12 முக்கிய மத்திய அமைச்சர்கள் ஒரே சமயத்தில் நீக்கப்பட்டதன் பின்னணி

பிரதமர் நரேந்தர மோடியின் 12 முக்கிய மத்திய அமைச்சர்கள் ஒரே சமயத்தில் நீக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னணியில் பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 12 மத்திய அமைச்சர்கள் பிரதமர் நரேந்தர மோடியால் நீக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடியின் தனித்துவம் பாஜகவில் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

காங்கிரஸின் இந்திரா காந்தியை போல் பாஜகவின் பிரதமர் மோடி தன்னை உறுதியானவர் என நிரூபித்திருப்பதாகவும் தெரிகிறது. இதன் முக்கிய உதாரணமாக, மத்திய அமைச்சரவையின் 12 உறுப்பினர்கள் நீக்கம் அமைந்துள்ளது.

முக்கிய அமைச்சரான மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் நீக்கம் அதிகக் கவனம் பெற்றுள்ளது. கரோனா பரவலால் பிரதமர் மோடியின் நிர்வாகம் எதிர்கட்சிகள் இடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டது.

ஆக்சிஜன் பற்றக்குறை உள்ளிட்ட முறையான நடவடிக்கை இன்றி பல லட்சம் உயிர்கள் பரிதாபமாகப் பலியானதாக விமர்சிக்கப்படுகிறது. இவைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி ஹர்ஷ் வர்தனை நீக்கியிருப்பதாகக் கருத்து நிலவுகிறது.

இதன் அடுத்த நிலையில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறையின் அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிஹாரின் முக்கியத் தலைவரான ரவிசங்கரது ட்விட்டருடனான மோதல் பின்னணியில் இருந்துள்ளது.

இந்த மோதலில் மத்திய அமைச்சர் ரவிசங்கரின் ட்விட்டரை கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. அது மீண்டும் இணைக்கப்பட்டாலும் இந்த சம்பவம் சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் புகழுக்கு இழுக்கானதாகக் கருதப்படுகிறது.

இத்துடன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்பத்துறையில் நிலவிய சிக்கல்களை அவரால் விரைந்து தீர்க்க முடியவில்லை. இதன் காரணமாகவே ரவிசங்கரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மற்றொரு முக்கிய அமைச்சகமான கல்வித்துறையின் டாக்டர் ரமேஷ் பொக்ரியாலின் நிர்வாகத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகமானது. எனினும் இது, பிரதமர் மோடி எதிர்பார்த்த அளவுக்கு விரைந்து அமலாக்கப்படவில்லை எனப் புகார் உள்ளது.

ஏனெனில், பாஜகவின் சீர்திருத்தக் கொள்கைகள் பரப்பலில் முக்கிய அமைச்சகமாக கல்வித்துறை இருந்தது. இவை அனைத்தையும் விட முக்கியமாக அவரது உடல்நிலை காரணமாகி விட்டது.

கரோனா தொற்று காரணமாக ரமேஷ் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிரசிகிச்சைப் பிரிவில் 15 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவரது உடல்நிலை குன்றியிருப்பதாகவும் காரணம் கூறப்படுகிறது.

பாஜகவின் மூத்த அமைச்சர்களில் முக்கியமானவரும் மத்திய அரசின் செய்தி தொடர்பாளருமான பிரகாஷ் ஜவடேகர். இவர், மீது, கரோனா பரவலில் மத்திய அரசிற்கு எதிராக எழுந்த புகார்களுக்கு சரியானப் பதிலடி அளிக்கவில்லை எனக் குறை கூறப்படுகிறது.

வெளிநாடுகளின் ஊடகங்களும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க செய்தித்தொடர்புத்துறை அமைச்சர் ஜவடேகர் வாய்ப்பளித்ததாகவும் புகார் உள்ளது. இதனால் பிரதமர் மோடி பெயருக்கு தனிப்பட்ட முறையிலும் களங்கம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

இவற்றை மனதில் வைத்த பிரதமர் மோடி, அவரது மூத்த வயதான 70 என்பதை காரணம் காட்டி ஜவடேகரை வெளியேற்றி விட்டார். ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரான சதானந்த கவுடாவின் நீக்கத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

கரோனாவின் இரண்டாவது பரவலில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு உருவானது. குறிப்பாக ரெம்டெசிவருக்கு பொதுமக்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இதில் பல உயிர்களும் பலியானதாகப் புகார் உள்ளது. அதேசமயம், தனது சொந்த மாநிலமான கர்நாடகாவின் உட்கட்சி பூசலும் சதானந்தாவின் வெளியேற்றத்திற்கு காரணமானது.

இங்கு முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிரான அரசியலை சதானந்தாவால் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. எனவே, அவருக்கு பதிலாக அவரது மாநிலத்தவரும் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவு பெற்றவருமான ஷோபா கரண்டல்ஜே கொண்டு வரப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில் அதன் முக்கியத் தலைவரான சந்தோஷ் குமார் கங்குவாரும் பதவி நீக்கம் பெற்றுள்ளார். இவருக்கும் கரோனா பரவலே காரணமாகி விட்டது.

இக்காலகட்டதில் அமைச்சர் கங்குவார் தொழிலாளர்கள் பாதுகாப்பை முறையாகப் பேணவில்லை எனப் புகார் உள்ளது. இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றமும் தனது அதிருப்தியை அரசு மீது காட்டி இருந்தது.

இதுவன்றி, அவர் தனது சொந்த மாநிலத்தின் பாஜக அரசுடன் கைகோர்த்து செல்லவில்லை. மாறாக அதன் முதல்வரான யோகி ஆதித்யநாத் மீது கரோனா பரவலில் அவரது நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என எழுதியப் புகார் கடிதம், கங்குவாருக்கு எதிரானது.

உ.பி.யில் ஏழு பேர்

இந்த ஒரு அமைச்சர் நீக்கப்பட்டு உ.பி.யை சேர்ந்த ஏழு பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியால் நீக்கப்பட்ட இதர அமைச்சர்களில் மத்திய கல்வித்துறையின் இணை அமைச்சரான சஞ்சய் தோத்ரேவும் அதிருப்தி பட்டியலில் இருந்தார்.

அமைச்சர் உள்ளாரா?

இப்படி ஒரு அமைச்சர் உள்ளாரா? என்பதே தெரியாத வகையில் சஞ்சயின் நடவடிக்கைகள் இருந்தன. இதே பட்டியலில், மத்திய அமைச்சரவையின் இணை அமைச்சர்களான பாபு லால் சுப்ரியோ, ரத்தன் லால் கட்டரியா, பிரதாப் சாரங்கி, திபாஸ்ரீ சவுத்ரி ஆகியோரின் செயல்பாடுகளும் இருந்துள்ளன.

பிரதமரின் குணாதியசம்

இவர்கள் மீது பிரதமருக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் இடம்பெறாமல் இருந்துள்ளது. இதுபோன்ற மத்திய அமைச்சர்களை ஏற்பது என்பது பிரதமர் மோடியின் குணாதியசத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது.

முக்கியத்துவம் உணராத அமைச்சர்கள்

இந்த இணை அமைச்சர்கள் தனக்கு கிடைத்த முக்கியத்துவத்தை உணராமல் இருந்துள்ளனர் என்பதை உணர்ந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சர் பாபு லால் சுப்ரியோ தனது சொந்த மாநிலத்திலேயே வெற்றி பெற முடியாமல் இருந்துள்ளார்.

2024 மக்களவை தேர்தல்

இதே நிலைக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் இணை அமைச்சரான திபாஸ்ரீ சவுத்ரியும் தள்ளப்பட்டிருந்தார். இவர்களை 2024 மக்களவை தேர்தலை மனதில் வைத்து மாற்றிய பிரதமர் மோடி, அவர்களுக்கு பதிலாக அதே மாநிலத்தின் 4 புதியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மத்திய சிறுபான்மை நலத்துறையின் ஜான் பர்லா, மத்திய உள்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டில் நிஷித் பிரமானிக் மற்றும் கல்வித்துறையில் சுபாஷ் சர்கார் ஆகியோர் உள்ளனர்.

கவுரவ வழியனுப்புதல்

நீக்கப்பட்ட 12 அமைச்சர்களில் தாவர்சந்த் கெல்லோட்டும் 70 வயது மூத்தவர்கள் பட்டியலில் வருகிறார். எனினும் கெல்லோட் மட்டுமே கர்நாடகாவின் ஆளுநராக்கப்பட்டு பிரதமர் மோடியால் கவுரமான முறையில் வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x