

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 911 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 43 ஆயிரத்து 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 767 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில், 1.49 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 2 கோடியே 98 லட்சத்து 88 ஆயிரத்து 284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.19 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்படுவோரைவிட, கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 1,977 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 911 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 5 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 90 ஆயிரத்து 708 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 42 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரத்து 605 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 36.89 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.